search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்திய மந்திரி சவுத்திரி பிரேந்தர் சிங்"

    சேலம் உருக்காலை நஷ்டமாவதற்கு தமிழக அரசே காரணம் என்று மத்திய மந்திரி சவுத்திரி பிரேந்தர் சிங் குற்றம்சாட்டியுள்ளார். #SalemSteelplant
    சேலம்:

    இரும்பு மற்றும் எக்குத்துறை மந்திரி சவுத்திரி பிரேந்தர் சிங் சேலம் இரும்பாலையில் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் உருக்காலை நிர்வாகத்தினர் மற்றும் தொழிலாளர்களுடன் ஆலோசனை நடத்திய அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சேலம் உருக்காலை லாபத்தில் இயங்க என்ன செய்ய வேண்டும்? என்பதற்காகவே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. உருக்காலை மூலம் கடந்த 10 ஆண்டுகளில் ரூ.2 ஆயிரம் கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    இந்த உருக்காலையில் தயாரிக்கப்படும் ஸ்டீல் உலகத்திலேயே மிக சிறந்த ஸ்டீலாக உள்ளது. உருக்காலையில் உற்பத்தி திறனை அதிகரிக்கவும், லாபத்தில் இயங்கவும் அதன் நிர்வாகத்தினர் மற்றும் தொழிலாளர்கள் சில யோசனைகள் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள், இந்தாண்டே பெரிய அளவில் நஷ்டத்தை குறைக்க முடியும் என்றும், அடுத்த ஆண்டே லாபத்தில் இயக்க முடியும் என்றும் உறுதி அளித்துள்ளனர்.

    இந்த உருக்காலைக்கு தமிழக அரசு மின்சாரத்தை அதிக விலைக்கு வினியோகம் செய்கிறது. இதனால் இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு ஒரு யூனிட்டுக்கு அதிக விலை கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. மின்சார கட்டணம் அதிக செலவை ஏற்படுத்துகிறது. இரும்பாலை நஷ்டத்தில் இயங்க இதுவே காரணம். இந்த மின் கட்டணத்தை குறைக்க தமிழக அரசிடம் பல முறை கேட்கப்பட்டது. ஆனால் இதுவரை குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை.


    இந்த மின் கட்டணத்தை குறைக்க தமிழக அரசிடம் பல முறை கேட்கப்படும் என்பது அமைச்சகத்தின் கொள்கை முடிவாக உள்ளது. மின் செலவை குறைக்கும் வகையில் சேலம் இரும்பாலையில் சூரிய ஒளி மூலம் 50 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட உள்ளது. இது நடைமுறைக்கு வரும் போது 20 சதவீத செலவு குறையும்.

    புதிய முயற்சிகள் மூலம் 30 வகையான மதிப்பு கூட்டு பொருட்களை உற்பத்தி செய்ய உள்ளோம். உருக்காலையில் மொத்த உற்பத்தித்திறன் 3 லட்சத்து 64 ஆயிரம் டன். இதை அடைந்தாலே நஷ்டத்தை குறைக்கலாம். ஊழியர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம்.

    இன்னும் 4 காலாண்டுக்குள்(ஓராண்டுக்குள்) உருக்காலை லாபத்தில் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கிய காரணத்தினால் தான் உருக்காலையின் பங்குகளை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அமைச்சரவை முடிவு செய்தது.

    உருக்காலையை தனியார் மயமாக்க கூடாது என்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, சேலம் தொகுதி எம்.பி. பன்னீர்செல்வம் ஆகியோர் என்னை பலமுறை சந்தித்து வலியுறுத்தினர். உருக்காலையில் இருந்து மேற்கு வங்காளத்தில் உள்ள ரெயில் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலைக்கு உதிரிபாகங்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

    உருக்காலையை தனியார் மயமாக்குவது குறித்து அதன் செயல்பாடுகளை பொறுத்து முடிவு எடுக்கப்படும். உருக்காலையின் உள் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக தமிழக அரசு 0.1 சதவீத வட்டியில் ரூ.215 கோடி கடன் வழங்க உள்ளதாக உறுதி அளித்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #SalemSteelplant
    ×